.

Monday, March 29, 2021


தோழர் ரகு சில நினைவுகள் 
மறு பதிவு

தோழர் ரகு பவள விழா 
              6-5-2017

கடலூர் தொலைபேசி ஊழியர்கள் வேறு,
தோழர் ரகு வேறா?
ரகுதான் கடலூர்,
கடலூர்தான் ரகு!

அந்தத் தலைவனுக்கு
அகவை 75,
பவள விழா!

பவளவிழா காணும் தலைவா!
நூற்றாண்டு காண வாழ்த்துகிறோம்!
வாழி பல்லாண்டு!

நீ
ஓரிடம் நில்லாத
காற்று!

எங்கும் நிறைந்திருப்பாய்
இன்னல் உற்றோர்க்கு
இதம் தரும் தென்றலாய்!

போர்க் களத்தில்
புயற்காற்றாய்!

எதிரிகளிடத்தே
சண்ட மாருதமாய்!

அதிகார வர்க்கத்தைக்
கதிகலக்கும் சூறைக் காற்றாய்!

எங்கள் ஜீவனின்
உயிர்க் காற்றாய்!

NFTE  ஜிந்தாபாத்
விண்ணதிரும் முழக்கங்கள் --
எங்கள் காதுகளில்,

தியாகத் தலைவர்கள் ஜிந்தாபாத்!
தோழர் ரகு ஜிந்தாபாத்!”
என்றே அதிர்கிறது!

சேர்ந்து நாங்களும்
முழங்குவோம்,

 தலைவா வாழி!
 தோழா வாழி!
 வாழிய பல்லாண்டு,

 பல்லாயிரத்தாண்டு

தோழர் ரகு பணிஓய்வு பாராட்டு விழாவில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “விருட்சம்” பாராட்டு விழா மலரில் தோழர் ரகுவைப் பற்றி தலைவர்களின் கட்டுரை காண 
இங்கே சொடுக்கவும்....... 


கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில்

தோழர் ரகு....







NFTE, TMTCLU கடலூர் மாவட்ட சங்கங்கள்

கடலூர் ரகுவிற்கு அஞ்சலி 
தோழர் எஸ்ஸார்சி
கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத்தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார். அவரின் வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர் ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத்தோழர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத்தோழர்களிடமிருந்து அவர் இறுதிவிடைபெற்றுக்கொண்டார்.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்து த்தொலைபேசி ஊழியர்களில் குறைந்தது ஓர் ஆயிரம் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குபெற்ற பண்பாளர். தோழர் ரகு நேர்மைச்செல்வத்திற்குக்கு ஓர் ஒளி வீசும் இலக்கணம் முந்திரிக்காட்டில் முப்பது பேர் என்று குறைவாக மதிப்பிடப்பட்ட தொழிற்சங்கத்தை ஆயிரம் உறுப்பினர்களுக்கு ச்சொந்தமாக்கிய அமைப்பு க்கலைதெரிந்த தோழர் வித்தகர்.

மகளிருக்குப்பாத்காப்பு தர மறுத்திட்ட தொலை பேசி நிர்வாத்தை எதிர்த்து 1980 பிப்ரவரியில் நடை பெற்ற கடலூர் தொலைபேசி மாவட்ட போராட்டம் ஐந்து நாட்கள் நடைபெற்றது .300 தோழர்கள் நிர்வாகத்தால் தண்டனை பெற்றார்கள் .எல்லோரையும் பெற்ற தண்டனையிலிருந்து மீட்டெடுத்தச் சாதனையாளர் ரகு.

தொழிற்சங்கத்தை சமூக நோக்கத்தோடு அணுகியவர். உறுப்பினர்களின் நாட்டுப்பற்றுக்கு உரம் ஊட்டி வளர்த்தவர். மார்க்சியத்தை மனித நேய மாற்று க்குறையாமல் காத்த போராளிகளில் ரகு முதன்மையானவர். ஒழுக்க சீலர். மானுடப்பண்பின் உரைகல்.

 நாற்பது ஆண்டுகள் தொலைபேசித்துறையில் பணிக்கலாசாரத்தோடு பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொலைபேசி ஊழியர் பொதுவுடமை (NFTE) த்தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களில் ஈடுபாட்டோடு பங்காற்றியவர். ஒவ்வொரு தோழனுக்கும் அவரின் உதவியும் ஆலோசனையும் எவ்வகையிலேனும் நிச்சயமாகக்கிடைத்தேயிருக்கும். அவ்வுதவியை அந்தத்தோழர் தன் வாழ்நா:ள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளவே வாய்க்கும் .இது கடலூர்ப்பகுதியின் எதார்த்தம்.

திருவரங்கத்து ப்புனித பூமியில் மிக உயர்ந்த ஆசார சீலர்களின் குடும்பத்தில் பிறந்த ரகுநாதன் சாதி மத மாச்சர்யங்களைக்கடந்து தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். தன் இறுதி மூச்சு வரை தன் குல ஆசாரப்படி அணியவேண்டிய முப்பிரி நூல் அணியாது புரட்சிகரமாய்த் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

 கடலூர் ப்பகுதியில் பணியாற்றிய தோழர் சிரில் என்னும் அன்புத்தோழரின் வழிகாட்டுதலால் மார்க்சிய நெறிக்கு கொண்டுவரப்பட்டவர் தோழர் ரகு.. தமிழக தொலைபேசி ஊழியர்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட உத்தமர் தோழர் ஜகன் அவர்களுக்கு மிக அணுக்கமானவர்.

தோழர் ரகுவின் பணி ஓய்வு ப்பெருவிழா கடலூர் நகர் மன்ற அரங்கில் 01 06 2002 ல் வெகு சிறப்பாக தொலைபேசித்தோழர்களால் கொண்டாடப்பட்டது. பொதுவுடமைச்செல்வர் மூத்த தோழர் நல்லக்கண்ணு விழாவில் கலந்துகொண்டு ரகுவை வாழ்த்திப்பெருமை சேர்த்தார் நிகழ்ச்சியை கடலூர் மாவட்டத்து தொலைபேசி ஊழியர் சங்கத்து நெறியாளர் ஸ்ரீதர் சிறப்பாக வடிவமைத்துச் சரித்திரம் படைத்தார்..

 விருட்சம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை மலர் வெளியிடப்பட்டு தோழர் ரகுவின் அருமை பெருமைகளை எல்லோரும் அறிய அது வாய்ப்பானது. கவிஞர் கோவி. ஜெயராமன் தொலைபேசி ஊழியர் சங்கத்து த்தலைவர் பணி ஓய்வு விழா மலர் சிறக்கவும் அவ்விழா நிகழ்வு ஓர் வரலாறுத்தடமாக அமைந்திடவும் ஓய்வின்றி பங்களிப்பு நல்கினார்.

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை என்னும் அமைப்பினை கடலூர் தொலைபேசி ஊழியர்கள் அமைத்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் ப்பணி ஆற்றிவருவது இவண் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தொலை பேசி ஊழியர்களின் மாணவச்செல்வங்களுக்குச் சங்க வேறுபாடின்றி ஆண்டுதோரும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.

 தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தொடர்ந்து கவுரவிக்கப்படுகின்றனர்.. முனைவர் பாசுகரன் அகரமுதல்வன் பிரபஞ்சன் ராஜம் கிருஷ்ணன் காசி ஆனந்தன் அறிவுமதி பத்மாவதி விவேகானந்தன் சிருங்கை சேதுபதி ரகுவீர் பட்டாச்சாரியார் தா பாண்டியன் ராஜ்ஜா ஸ்டாலின் குணாசேகரன் திருப்பூர் சுப்புராயன் சமஸ் என அந்தவரிசை த்தொடர்கிறது இத்தைய அரிய நிகழ்வுகளுக்கு எல்லாம் தனது மனக்குகையில் அடித்தளம் அமைத்திட்டவர் தோழர் ரகுவே

கடலூரில் பல்வேறு இலக்கிய அமைப்புக்கள் இயங்குகின்றன தமிழ் ச்சான்றோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாமார்க்கும் குடியல்லோம் பாடிய அப்பர் உலாவிய மண். வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய பெருமகனார் ராமலிங்கர் திருவடி பட்ட திருமண் அல்லவா. ஈடில்லா தேசப்பற்றுக்கு ச்சொந்தமான வீரத்தாய் கடலூர் அஞ்சலை அம்மாள் இந்திய நாட்டு விடுதலைக்குப்போராடிய புனித பூமிதானே கடலூர்..

தோழர் ரகு, கடலூர் அருகே சாத்தான்குப்பத்திலுள்ள கிறித்துவ மிஷினரியின் ஆளுகையின் கீழுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பயிலும் மாணவச்செல்வங்களுக்கு உதவி க்கரம் நீட்டுவதில் முன் கை எடுத்தவர்.

2004 டிசம்பரில் கடலூர் சந்தித்த சுனாமி ப்பேரழிவு நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பங்களுக்கு உதவுவதில் முன் நின்றனர் கடலூர் மாவட்டத்துத் தொலைபேசித்தோழர்கள். தோழர் ரகுவின் பங்கு அதனில் மகத்தானது.

கடலூர் மாவட்ட கலை இலக்கியப்பெருமன்றக்கிளையின் செயல்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவர் தோழர் ரகு. இலக்கிய ப்பெருமன்ற நிகழ்வுகளான கவிஞர் ஞானக்கூத்தன் கவி அரங்கிலும் நூற்கடல் கோபாலைய்யர் கம்பனில் தோழமை உரை நிகழ்விலும் தனுஷ்கோடி ராமசாமியின் ஜெயகாந்தன் ஞான பீடவிருதுபெற்றமை குறித்து பாராட்டு நிகழ்விலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர்..

கடலூரில் எண்ணற்ற தொழிற்சங்க .மாநாடுகள் தோழர் ரகுவின் தலமையின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றதனை இங்கேபெருமையோடு குறிப்பிடலாம்.

தோழர் ரகுவின் எல்லையற்ற தோழமைப்பண்பு காணக்கிடைக்காத செல்வம். துப்புரவு ப்பணியாற்றும் தொழிலாளியிலிருந்து எத்தனை உயர் மட்டஅதிகாரிகள் இருந்தாலும் எல்லோருடனும் சம நிலையோடு பழகும் பண்பாளர் தொலைபேசி ஊழியர்களின் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகளைத் தனது கூர்மதியால் தீர்த்துவைத்தவர்.

தொலை பேசித்தொழிற்சங்கம் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் சாதித்தவைகள் ஏராளம்.தினக்கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கையில் லட்சம் பேருக்கும் கூடுதலாக நிரந்தர ஊழியர் ஆக்கிய சாதுர்யத்திற்கும் சாகசத்திற்கும் பாத்தியதையுடைய உயிரோட்டமுள்ள அமைப்பு அது. அந்தப்பெருமை மிகு அமைப்பின் செயல்பாட்டிற்கும் சிறப்புக்கும் தோழர் ரகு போன்ற தலைவர்களே ஆனிவேராக இருந்து பணியாற்றியவர்கள்.

கடலூரில் மகளிர் தினவிழா ஆண்டுதோரும் மார்ச் மாதம் எட்டாம் நாள் நடைபெறும் அவ்வீழாவில் சாதனைப் பெண்மணிகள் கலந்து கொள்வர். பெண்கள் விழாமட்டுமே மேடையை அலங்கரிப்பார்கள்.விழா நிகழ்வு முழுமையும் பெண் ஊழியர்களால் மட்டுமே நடத்தப்படும்.தோழியர் கே. விஜயலட்சுமி எனும் இந்தத்தோழியர் மகளிர் தினவிழா நிகழ்வுகளுக்குப்பொறுப்பாகச்செயல்பட்டார். அந்தத்தோழியரும் அண்மையில் காலமானார். இப்படியாக மகளிர் நிகழ்வுகளுக்கு பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்துள்ளார்கள். ராஜம் கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி,அ. வெண்ணிலா பர்வீன்சுல்தானா என அந்த வரிசையைப்பட்டியலிடலாம்.

கருத்து மாறுபாடு கொண்ட தோழர்களை அரவணைத்துச்செல்வதில் தோழர் ரகுவிற்கு நிகர் ரகுவே. எதிரணித்தோழர்களோடு விவாதிப்பதில் பிரச்சனைகளை எடுத்துவைப்பதில் ரகுவிற்கு நிகர் அவர் மட்டுமே.. அத்தனை கூர்மையான அறிவுத்திறனுடன் ததும்பும்நகைச்சுவை உணர்வுடன் விவாதம் செய்பவர்களைத் தொழிற்சங்க அரங்கில் காண்பது மிக அரிது.

எப்பொழுதும் படித்த்க்கொண்டே இருக்கும் தோழர் ரகு. ஆங்கிலப்புலமை மிக்கவர். மேடைகளில் பேசும் போது அவரின் பேச்சு நம்மைத் தட்டி எழுப்பும் சொக்கவைக்கும். இந்தி மொழியிலும் ஆகத்தேர்ச்சிபெற்றவர் ரகு. வட இந்தியத்தலைவர்களின் இந்தி உரையை நம்தமிழில் ஆக்கி விருந்து படைப்பார்.

 ஆங்கில மொழிச்செறிவால் நல்ல மொழி பெயர்ப்பாளர்.

அதிகாரிகள் எத்தனை உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தோழரின் பேச்சாற்றலுக்கு முன்னால் தோற்றுத்தான் போவார்கள். தோழர் எடுக்கும் பிரச்சனைகளில் நேர்மை நிச்சயம் கொலுவிருக்கும். சட்டப்படியே செய்யவேண்டும் என்பதில் மாற்றுகுறையாத உறுதியிருக்கும்./ எடுக்கப்படும் எல்லாமுடிவுகளுக்கும் அடி நாதமாக மனிதாபிமானம் மிளிர்வதை நாம் கண்டுணர முடியும்.

தன் குடும்ப முன்னேற்றத்தைவிடத் தன் தோழர்களின் நல் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே சிந்தித்த ஒரு தோழர் உண்டென்றால் அந்த அதிசயமே எங்கள் ரகு.

நல்ல நண்பனாய் உடன் பிறவா சகோதரனாய் பெற்றதாயினும் சாலப்பரிந்து உதவும் அன்பருக்கு அன்பனை தோழர் ரகுவை நாம் தோற்றுவிட்டுத்தான் நிற்கிறோம்.

அவரை மீண்டும் படிப்போம். தோழர் ரகுவின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டக்
காத்திருக்கின்றன.

 
’உன்னோடு விவாதித்து

வென்றவர் இல்லை

ஆனால்

தோற்பதிலும் வெற்றியுண்டு

எப்படி நீ அறியாது போனாய் ?’

 

கவிஞர். கடலூர். நீலகண்டன்

நன்றி:
https://puthu.thinnai.com/?p=41887

Sunday, March 28, 2021

தோழர் ரகு சில நினைவுகள்
தோழர் ரகுவைப் பற்றி தோழர் பட்டாபி



தோழர் ரகு - சில நினைவுகள் 
கடலூரில் தோழர் ரகு அவர்கள் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி. கடலூரில் 19 ஜனவரி 2021இல் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர் ஞானையா அவர்களின் நூற்றாண்டு 







Friday, March 19, 2021

தோழர்களே!
VRS2019இல் சென்ற தோழர்கள் அனைவரும் நிலுவையில் இருந்த கடைசி நான்காம் கட்ட exgaratia தொகை பெற்று இருப்பீர்கள். அது போன்று 60வயது முடித்தவர்கள் commutation, gratuity ஆகியவைகள் பெற்றிருப்பீர்கள். மாதாமாதம் பென்ஷனும் மகிழ்ச்சியோடு பெற்று கொண்டிருப்பீர்கள். இதனை நாம் இன்று மத்திய அரசு பென்ஷன் பெற்றுக் கொண்டிருப்பதற்கு நமது பிதாமகன் தோழர் குப்தா மற்றும் தோழர் ஜெகன் ஆகிய தலைவர்களே காரணமாவர். நமது தமிழ் மாநிலச் சங்கம் நமது இருபெரும் தலைவர்களின் நினைவாக சென்னை தமிழ் மாநில சங்க கட்டிடத்தில் தலைவர்களின் திருஉருவச்சிலையை நிறுவ VRSஇல் செல்லும் தோழர்களிடம் நன்கொடையாக பெற மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நமது மாவட்ட சங்கம் விருப்ப ஓய்வில் சென்ற பெரும்பான்மையான தோழர்களிடம் ரூபாய் இரண்டாயிரம் நன்கொடை பெறப்பட்டது. ஒரு சில தோழர்கள் இதுவரை நன்கொடை அளிக்கவில்லை. நன்கொடை அளிக்காத தோழர்கள் உடனடியாக ரூபாய் 2000 நன்கொடை அளித்து தங்களது கடமையை ஆற்ற தோழமையுடன் வேண்டுகிறேன்.🙏 தோழமையுடன்
*D.குழந்தை நாதன்*
*மாவட்டச் செயலர்*
*NFTE-BSNL*
*கடலூர் மாவட்ட சங்கம்*

Friday, March 12, 2021

தோழர்களே!
இன்று 12.3.2021 VRS இல் சென்ற தோழர்களுக்கு கடைசி தவணை எக்ஸ்கிரேசியா தொகை அவரவர் ஊதியம் வாங்கிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தொகையில் நடப்பு ஆண்டிற்கான வருமானவரி பழைய முறைப்படி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் BSNL ஊழியர் குடியிருப்பில் தற்போது வசித்து வரும் VRS இல் சென்ற 12 தோழர்களுக்கு வாடகை பிடித்தம் கணக்கிடப்படாததால் அவர்களுக்கு கடைசி தவணை வழங்கப்படவில்லை.
 
அதுபோன்று NEPP போடப்பட்டு மாநில நிர்வாகத்தில் முடிவு செய்யப்படாததால் இரண்டு ஓட்டுநர்களுக்கு கடைசி தவணை வழங்கப்படவில்லை. அவர்களுக்குரிய தொகை DOT யிடம் இருந்து பெறப்பட்டுவிட்டது. அவர்களுக்குப் பின்னர் வழங்கப்படும். 

NEPP போடப்பட்ட தோழர் விக்கிரவாண்டி R.ரவி, தோழியர் தவமணி ஆகியோருக்கு புதிய சம்பளத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எக்ஸ்கிரேசியா கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் வீஆர்எஸ் அளித்த பிறகு மரணமுற்ற நான்கு பேரின் வாரிசு குடும்ப ஓய்வூதியர்களுக்கு தொகை வழங்கப்பட்டு விட்டது.

தோழமையுடன்
D. குழந்தை நாதன்
 மாவட்ட செயலர் கடலூர்





Monday, March 8, 2021

புதிய சகாப்தத்தில் 
சர்வதேச மகளிர் தினம் :
சவால்களும் முறியடித்து முன்னேறும் பாதையும்
--ஆனி ராஜா
பொதுச்செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW)
மற்றும் துணைத் தலைவர், சர்வதேசப் பெண்கள் ஜனநாயக சம்மேளனம்* (WIDF)
      (சர்வதேசப் பெண்கள் ஜனநாயக சம்மேளனம், பனிப் போர் காலத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் உலக அமைப்பு. அது, பாசிசத்திற்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சமூக அந்தஸ்து மேம்பாட்டிற்குப் பாடுபடும் உலகளாவிய அமைப்பு; 1945, நவம்பர் 29ம் நாள் பாரிஸில் தொடங்கப்பட்டது. –நன்றி விக்கிபீடியா)
 டெல்லியில் வீட்டு வேலை செய்து வாழும் ஒரு பெண் உழைப்பாளி, கமலா சொல்கிறார்: “ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் வழக்கமாக ஒரு லிட்டர் பால் வாங்கி என் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு குவளை பால் தருவேன். எங்கள் வேலைகளை இழந்து, கையில் இருந்த சிறிது சேமிப்பும் கரையத் தொடங்கியதும் அரை லிட்டர் பால் வாங்கி அரைக் குவளை பால் மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கொஞ்ச காலத்தில் அது கால் லிட்டராகி, பால் கலந்த தேனீர் தரத் தொடங்கினேன். ஒரு மாதம் ஊரடங்கில் செல்ல, பால் டீ வெறும் கறுப்புத் தேனீர் ஆனது. இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் என் குழந்தைகளுக்கு இந்த வெறும் கறுப்புத் தேனீரைத் தரமுடியுமோ தெரியவில்லை.” டெல்லியில் செயல்படும் ‘உணவுக்கான உரிமை இயக்க’மும் நமது மாதர் சம்மேளனமும் பொதுமக்களிடம் கருத்தறிய நடத்திய விசாரணையில் பலருக்கும் மத்தியில் கமலா வெளிப்படையாகக் கூறியது. இது அந்த ஒரு பெண்ணின் கதை மட்டுமே அல்ல.
 ஏற்கனவே நெருக்கடியில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை உலகளாவிய தொற்று நிலைகுலையச் செய்தது. மக்களோ பொருளாதார நெருக்கடி மற்றும் கரோனா தொற்று என்ற இரட்டை நெருக்கடியில் சிக்கி அவர்களின் அழிவைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில், உற்பத்தி வளர்ச்சிக்கான முதலாளித்துவ முறை மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது தோல்வி அடைந்துள்ளது. 
 ஒருபக்கம் தொற்று முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியபோது, மறுபக்கம் சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களிடம் பெரும் சவாலை விடுத்துள்ளது. நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளில்தான் தொற்றின் காரணமாக மக்கள் பலியானது அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்ட சின்னஞ்சிறிய சோஷலிச கியூபா தேசமோ தனது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் குழுக்களை உலகத்தின் கண்டங்கள் தோறும் அனுப்பி வைத்து அவர்களின் பெரும் சுகாதார நெருக்கடியில் அனைவரும் உற்ற துணையாய் உதவியதை உலகம் காணவே செய்தது. (“இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண/ நன்னயம் செய்து விடல்” –குறள் 314)  
 தற்போதைய மகளிர் தினத்திலும் கூட, பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி உலகம் முழுவதுமுள்ள பெண்கள் தங்கள் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளையும் சாதனைகளையும் நிலைநாட்டிப் பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் பெண்களின் நூற்றாண்டு கால எண்ணற்றப் போராட்டங்களும் தியாகங்களும் பெண்ணினத்தை முன்னேற்றப் பாதையில் சமத்துவம் மற்றும் நீதியோடு கூடிய மேம்பட்ட அந்தஸ்தை அடைய உதவியது. ஆனால் கோவிட் 19 தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில், நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திணித்தும் நாட்டின் செல்வத்தைத் தீவிரமாகக் கார்ப்பரேட் மயமாக்கியும், பெண்களை மீண்டும் பழைய துன்ப துயரங்களில், விரைவில் பாதிக்கப்படக் கூடிய நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்துகிறது. தொற்றினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளுமே. 
 இந்த மார்ச் 8ல் பெண்கள் மீண்டும் புதிதாக, மேலும் அர்ப்பணிப்பு உறுதியோடு முந்தைய பலன்களை திரும்பப்பெற, நிலைநிறுத்த, சம உரிமை உள்ள குடிமக்களாகப் பெண்கள் அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தைப் பெற பாடுபட வேண்டிய தேவை உள்ளது. 
அச்சுறுத்தும் பாதிப்புகள் 
 தொற்று பாதிப்பும் முன்யோசனை, திட்டமில்லா ஊரடங்கும் இந்தியாவில் சமூக பொருளாதார நிச்சயமற்றதன்மையை மேலும் ஆழமாக்கியது. அதிகரித்த வேலையிழப்பு, பெரும்பான்மைத் தோழிலாளர்களின் புலம் பெயர்வு, பட்டினி, சத்து குறைபாடு, வன்முறை, கடன்சுமை போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு நொடித்து விழும் நிலைமையில் வாழ்வாதாரம் இழந்து, பெரும் பாதிப்புக்களில் வீழ்ந்து கிடக்கும் பல இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வை அவை அம்பலப்படுத்தி விட்டன. விளிம்புநிலைப் பிரிவு மற்றும் ஏழைகளில் பெண்களின் வாழ்வோ முற்றிலுமாகத் தொலைந்து போனது. சமூகத்தில் சாதி, வகுப்பு, பாலினப் பிரிவு இவற்றின் ஊடுபாவுகளில் சிக்கிய விளிம்புநிலைப் பெண்கள் மோசமான நிச்சயமற்ற நிலையைச் சந்தித்தனர். வேலையை இழந்த பெண்களுக்கோ வீட்டிலே கிடக்கும் ஆண்களையும் பெரியவர்களையும் குழந்தைகளையும் பராமரித்துப் பார்த்துக் கொள்ளும் கூடுதல் பணிச்சுமையும் சேர்ந்து கொண்டது; நிலையற்ற வருவாய், வீட்டில் அதிகரித்த இல்ல வன்முறைகள் எல்லாம் பெண்களை மேலும் மேலும் நிச்சயமற்ற எதிர்காலத்தில் தள்ளியது.  
அதிகரிக்கும் வன்முறைகள் 
 தொற்று உலகமெல்லாம் இல்ல வன்முறை விகிதத்தை அபாயகரமாக அதிகரித்தது. பெண்களுக்கான இந்திய தேசியக் கமிஷன் தரும் புள்ளிவிபரப்படி, 2020 மார்ச் 2 முதல் 8 வரையான வாரத்தில் பதிவான 116 புகார்கள், மார்ச் 23 ஏப்ரல் 1 வாரத்தில் 257ஆக உயர்ந்தது; இவற்றில் 69 இல்ல வன்முறைகள். பெண்களுக்கு எதிரான 22 வகையான குற்றங்களில் 2020 ஏப்ரல் மே மாதங்களில் 3027 புகார்களும் அவற்றில் (47.2 சதவீதமான) 1428 இல்ல வன்முறைகளும் பெண்களின் நெருங்கிய துணைவர்களால் (intimate partner) நிகழ்ந்தப்பட்டது. 
 பெண்களுக்கு எதிரான வன்புணர்வு பாலியல் குற்றங்கள் என்றுமில்லாத கொடுமையாக அன்றாடச் செய்தி ஆகிறது. அதிகரிக்கும் இவ்வன்முறை நிகழ்வுகளையும் கொடுமைகளையும் மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. இந்திய உச்சநீதிமன்றம் உட்பட்ட நீதித்துறையின் மறுமொழி இதில் இன்னும் கவலையளிக்கும் கண்டனத்திற்குரிய போக்கு ஆகும். பெண்களின் பல ஆண்டு கால நீண்ட போராட்டங்கள் மற்றும் தியாகத்தால் சாதித்து வென்ற உரிமைகளையும், கொண்டு வரப்பட்ட சட்டங்களையும் நீதித் துறையே அவமதிக்கிறது. ‘இன்றைய’ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பெண்ணை அவளுடைய சொந்த அறிவின்படி சுதந்திரமான குடிமகளாகவும், சம உரிமையுள்ள மனுஷியாகவும் கருதாதது அதிர்ச்சி அளிப்பது. 
 மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘தேசிய குற்றப் பதிவு பீரோ’ (NCRB எனும் அரசின் முகமை) பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் முதல் இடத்தை வகிப்பது பாலியல் வன்முறையே என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது; அதிலும் குறிப்பாகத் தலித் பெண்களின் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. நிவாரணம் வழங்கும் அரசு இயந்திர அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து குழப்பத்தில் உள்ளன.
கல்வியிலிருந்து இடைநிற்றல்
 கோவிட்–19 பாதிக்கத் தொடங்கியதும் இந்தியாவின் கல்விமுறை வழமையான வகுப்பறை ஏற்பாட்டிலிருந்து, எந்தவிதக் கண்ணோட்டமும் திட்டமும் இல்லாமல், டிஜிடல் ஆன்-லைன் கல்வி முறைக்கு மாற்றப்பட்டது. சமுதாயத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெரும் டிஜிடல் பிளவை உண்டாக்கியதன் விளைவு, பேரளவிலான மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியைவிட்டு இடை நின்றார்கள். கடுமையான இப்பிரச்சனை ஒன்று இருப்பதாகவே மத்திய அரசு உணரவில்லை. இதைத் தீர்க்கும் வகையில் எல்லா குழந்தைகளும் ஆன்-லைன் கல்வியைப் பெறுவதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்துப் பாஜக தம்பட்டமடித்த போதினும், அதனை அமல்படுத்துவதற்கான வழிமுறைத் திட்டங்களுக்கு 2021-22 பட்ஜெட்டில் நிதி உதவி எதுவும் அளிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது மொத்த தேசிய உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.42 சதவீதம் மட்டுமே.
 ஊட்டச் ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகையின் அபாயகரமான விகிதம் 
 ‘விகாஸ் சம்வத்’ (வளர்ச்சிக்கான உரையாடல்) என்ற அரசுசாரா தன்னார்வ அமைப்பு ‘தேசிய குடும்ப நலச் சர்வே’ (NFHS)-5 என்ற ஆய்வறிக்கையில் 22 மாநிலங்களின் 18ல் இரத்த சோகை அபாயகரமாக அதிகரித்துள்ளதாக வெளியிட்டுள்ளது. உச்சபட்சமாக குஜராத்தில் 62.6 முதல் 79.7 சதவீதமாகவும்; அஸாமில் 35.7 முதல் 68.4 வரையிலும்; மகாராஷ்டிராவில் 53.8 முதல் 68.9 வரையிலும்; மேற்கு வங்கத்தில் 54.2 முதல் 69 சதவீதம் வரையிலும் உள்ளது. மற்றொரு புறத்தில், கோவா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 15 மாநிலங்களில் பேறுகால நிலையில் உள்ள தாய்மார்களில் இரத்த சோகை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கிறது. அந்த அமைப்பு 3வது சுற்றில் முன்பு நடத்திய (NFHS-3) சர்வேயைவிட தற்போது குஜராத்தில் 62.6 சதவீதமாகப் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல பீகாரில் முந்தைய 60.2 சதவீதத்திலிருந்து 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
 அதுபோலவே (NFHS-5) அறிக்கையில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பிரிவில் 22 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இருப்பது அப்பட்டமான மோசமான நிலைமையைப் படம் பிடிக்கிறது. 22ல் 13 மாநிலங்களில் குழந்தைகளின் நிலைமை பரிதாபகரமான அதிர்ச்சி அளிப்பதாகும். சிறுவயது குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற எடை இல்லாமல், சராசரி சர்வதேச தரத்தைவிட, மிகக் குறைவாக இருப்பதும்; அதுபோல வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் மிகவும் குறைந்து இருப்பதையும் (child wasting) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் நாடு முழுதும் 11 மாநிலங்களும், எடைகுறைவான குழந்தைகள் 14 மாநிலங்களிலும் மேலும் மோசமடைந்ததாக அறிக்கை பதிவு செய்கிறது. 
 மக்களின் உணவு மற்றும் ஊட்டச் சத்து தேவை குறித்து அரசின் கவனம் தொடர்ச்சியாக திசை மாறிச் சென்றதன் விளைவே மேற்கண்ட மோசமான நிலைமைக்குக் காரணம். மெல்ல மெல்ல இந்த நெருக்கடி மோசமடைய, பொது விநியோக முறை, அங்கன்வாடிகள், மதிய உணவுத் திட்டங்கள், பேறுகாலத் தாய்மார்களுக்கு உதவித் தொகைகள் வழங்கும் திட்டங்களை –கார்ப்ரேட் முதலாளிகளின் நன்மைக்காக – அகற்றி அரசு கைவிட்டதேயாகும்.  
பெண் தொழிலாளர்கள் இல்லாது போகும் நிலை
 கோவிட்-19க்கு முன்பே பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து மறைந்து போகும் நிலை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு இன்னும் அதிகரித்தது. அப்படிப் பெண் தொழிலாளர்கள் பணியாற்றியதே அமைப்பு சாரா பிரிவுகளில்தான்; அதுவும் 23.4 சதவீதத்திலிருந்து 2020ம் ஆண்டு 17 சதவீதமாகக் குறைந்தது.
   சமீபத்திய வேளாண் சட்டங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் மீது அரசமைப்பு ரீதியாகத் தொடுத்த மற்றுமொரு தாக்குதலாகும். அமலில் இருந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு குறுங்குறிகளாகச் சுருக்கியதும் தொழிலாளர்களிடம் கொஞ்ச நஞ்சமிருந்த உரிமைகளையும் உரித்தெடுத்துப் பறித்து விட்டது. 
பொறுப்பற்ற முறையில் தேசத்தின் செல்வம் கார்ப்பரேட்டுகளிடம் வாரி வழங்குதல்
 பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்கின்ற முக்கியமான சேவைகளை நம்பியே பெரும்பான்மை இந்திய மக்கள் உள்ளபோது, அரசு பைத்தியக்கார வேகத்தில் தனியார்மயம், கார்ப்பரேட் மயம் நோக்கி நெட்டித் தள்ளுகிறது; மேலும் நாட்டு மக்களுக்குச் சுகாதார மருத்துவச் சேவைகள் வழங்குவது, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தப்பி ஓடுவதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்க்கையை மேலும் பேரழிவுக்கு உள்ளாக்கியது. அதில் பெரிதும் பெண்களே பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாக, அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளே காரணம். பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே அதிகரிக்கும் இரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு இறுதியில் அவர்களைச் சப்தமில்லாமல் இனப்படுகொலை செய்வதில் முடிந்து விடும். 
 கரோனா தொற்று காலத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மனிதனும் வாழ்வாதாரத்தை இழத்தல், வருமானம் இழத்தலை உலகம் முழுவதும் சந்தித்தபோது, கார்ப்பரேட்டுகளின் லாபம் மட்டும் வானளாவ வளர்ந்தது அதிர்ச்சி அளிக்கவில்லையா? ஏதோ சிறிது சமூகப் பாதுகாப்பை அளிப்பது போல தோற்றமளித்த (உரிமை மற்றும் நலவாழ்வு வழங்கிய) சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை அரசு அகற்றி நீக்கியதன் மூலம், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டை வெறி மேலும் ஆதரவு உதவிகளைப் பெற்றது. 
சவால்களும் தடை உடைத்து முன்னேறும் வழியும் 
 இதுதான் நாட்டு மக்கள் முன், குறிப்பாகப் பெண்களுக்கு முன் உள்ள, உண்மையான சவால்: கார்ப்பரேட் – பாசிச அரசின் கூட்டை உடைத்து மேலும் பாலினச் சமத்துவ நியாயமுள்ள சமுதாயத்தைப் படைப்பது எவ்வாறு? கோவிட் சகாப்தத்துக்குப் பிறகான புதிய காலத்தின் அரசியல்முறை நிகழ்ச்சி நிரல் திட்டத்தில் பாலினப் பிரச்சனையை அனைத்துக்கும் முன் இடம்பெறுவதாக வைப்பதன் மூலமே இது சாத்தியமாகும். இது தானே நடந்து விடாது. அதற்கு, இன்றைய மனிதகுல சமூக பொருளாதார அரசியல் நெருக்கடி நேரத்தில் பாலினம் தொடர்பான கேள்விகளை உயர்த்திப் பிடித்து அங்கீகரிப்பதன் மூலமாகவும், கூட்டு உணர்வு பெறுவதும் அவசியமான தேவை. மேலும் மனுவாதி – ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சமரசமற்ற முறையில் இணைந்து போராடுவதும் தேவை. மேலும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒன்றாய் கரம் கோர்த்தல் வேண்டும்; எதற்காக? பெண்கள் அமைப்புகள், சுயேச்சையான பெண்கள் இயக்கம், குடிமைச் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் சமூகத்தின் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலான அனைவரும் முதலாளித்துவ, பாசிச மற்றும் ஆணாதிக்கச் சக்திகளைத் தோற்கடித்து நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவதும் தேவை. 
 தொற்று காலத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தனது புரட்சிகர சர்வதேசிய மகளிர் தின வாழ்த்துகளை ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக, தொற்றின் வைரஸ் கிருமி காரணமாக மட்டுமின்றி, எந்தவித சமூகப் பாதுகாப்பையும் வழங்காது முன்யோசனையற்ற ஊரடங்கு அமலாக்கியதாலும் பாதிக்கப்பட்ட கமலா போன்ற பெண்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 
 “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
  எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
  இளைப்பில்லை காண் என்று …
  பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!”
--நியூஏஜ் (மார்ச் 7 –13)
--தமிழில் : நீலகண்டன், 
தொடர்புக்கு 94879 22786