.

Monday, March 8, 2021

புதிய சகாப்தத்தில் 
சர்வதேச மகளிர் தினம் :
சவால்களும் முறியடித்து முன்னேறும் பாதையும்
--ஆனி ராஜா
பொதுச்செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW)
மற்றும் துணைத் தலைவர், சர்வதேசப் பெண்கள் ஜனநாயக சம்மேளனம்* (WIDF)
      (சர்வதேசப் பெண்கள் ஜனநாயக சம்மேளனம், பனிப் போர் காலத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் உலக அமைப்பு. அது, பாசிசத்திற்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சமூக அந்தஸ்து மேம்பாட்டிற்குப் பாடுபடும் உலகளாவிய அமைப்பு; 1945, நவம்பர் 29ம் நாள் பாரிஸில் தொடங்கப்பட்டது. –நன்றி விக்கிபீடியா)
 டெல்லியில் வீட்டு வேலை செய்து வாழும் ஒரு பெண் உழைப்பாளி, கமலா சொல்கிறார்: “ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் வழக்கமாக ஒரு லிட்டர் பால் வாங்கி என் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு குவளை பால் தருவேன். எங்கள் வேலைகளை இழந்து, கையில் இருந்த சிறிது சேமிப்பும் கரையத் தொடங்கியதும் அரை லிட்டர் பால் வாங்கி அரைக் குவளை பால் மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கொஞ்ச காலத்தில் அது கால் லிட்டராகி, பால் கலந்த தேனீர் தரத் தொடங்கினேன். ஒரு மாதம் ஊரடங்கில் செல்ல, பால் டீ வெறும் கறுப்புத் தேனீர் ஆனது. இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் என் குழந்தைகளுக்கு இந்த வெறும் கறுப்புத் தேனீரைத் தரமுடியுமோ தெரியவில்லை.” டெல்லியில் செயல்படும் ‘உணவுக்கான உரிமை இயக்க’மும் நமது மாதர் சம்மேளனமும் பொதுமக்களிடம் கருத்தறிய நடத்திய விசாரணையில் பலருக்கும் மத்தியில் கமலா வெளிப்படையாகக் கூறியது. இது அந்த ஒரு பெண்ணின் கதை மட்டுமே அல்ல.
 ஏற்கனவே நெருக்கடியில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை உலகளாவிய தொற்று நிலைகுலையச் செய்தது. மக்களோ பொருளாதார நெருக்கடி மற்றும் கரோனா தொற்று என்ற இரட்டை நெருக்கடியில் சிக்கி அவர்களின் அழிவைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில், உற்பத்தி வளர்ச்சிக்கான முதலாளித்துவ முறை மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது தோல்வி அடைந்துள்ளது. 
 ஒருபக்கம் தொற்று முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியபோது, மறுபக்கம் சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களிடம் பெரும் சவாலை விடுத்துள்ளது. நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளில்தான் தொற்றின் காரணமாக மக்கள் பலியானது அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்ட சின்னஞ்சிறிய சோஷலிச கியூபா தேசமோ தனது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் குழுக்களை உலகத்தின் கண்டங்கள் தோறும் அனுப்பி வைத்து அவர்களின் பெரும் சுகாதார நெருக்கடியில் அனைவரும் உற்ற துணையாய் உதவியதை உலகம் காணவே செய்தது. (“இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண/ நன்னயம் செய்து விடல்” –குறள் 314)  
 தற்போதைய மகளிர் தினத்திலும் கூட, பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி உலகம் முழுவதுமுள்ள பெண்கள் தங்கள் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளையும் சாதனைகளையும் நிலைநாட்டிப் பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் பெண்களின் நூற்றாண்டு கால எண்ணற்றப் போராட்டங்களும் தியாகங்களும் பெண்ணினத்தை முன்னேற்றப் பாதையில் சமத்துவம் மற்றும் நீதியோடு கூடிய மேம்பட்ட அந்தஸ்தை அடைய உதவியது. ஆனால் கோவிட் 19 தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில், நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திணித்தும் நாட்டின் செல்வத்தைத் தீவிரமாகக் கார்ப்பரேட் மயமாக்கியும், பெண்களை மீண்டும் பழைய துன்ப துயரங்களில், விரைவில் பாதிக்கப்படக் கூடிய நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்துகிறது. தொற்றினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளுமே. 
 இந்த மார்ச் 8ல் பெண்கள் மீண்டும் புதிதாக, மேலும் அர்ப்பணிப்பு உறுதியோடு முந்தைய பலன்களை திரும்பப்பெற, நிலைநிறுத்த, சம உரிமை உள்ள குடிமக்களாகப் பெண்கள் அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தைப் பெற பாடுபட வேண்டிய தேவை உள்ளது. 
அச்சுறுத்தும் பாதிப்புகள் 
 தொற்று பாதிப்பும் முன்யோசனை, திட்டமில்லா ஊரடங்கும் இந்தியாவில் சமூக பொருளாதார நிச்சயமற்றதன்மையை மேலும் ஆழமாக்கியது. அதிகரித்த வேலையிழப்பு, பெரும்பான்மைத் தோழிலாளர்களின் புலம் பெயர்வு, பட்டினி, சத்து குறைபாடு, வன்முறை, கடன்சுமை போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு நொடித்து விழும் நிலைமையில் வாழ்வாதாரம் இழந்து, பெரும் பாதிப்புக்களில் வீழ்ந்து கிடக்கும் பல இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வை அவை அம்பலப்படுத்தி விட்டன. விளிம்புநிலைப் பிரிவு மற்றும் ஏழைகளில் பெண்களின் வாழ்வோ முற்றிலுமாகத் தொலைந்து போனது. சமூகத்தில் சாதி, வகுப்பு, பாலினப் பிரிவு இவற்றின் ஊடுபாவுகளில் சிக்கிய விளிம்புநிலைப் பெண்கள் மோசமான நிச்சயமற்ற நிலையைச் சந்தித்தனர். வேலையை இழந்த பெண்களுக்கோ வீட்டிலே கிடக்கும் ஆண்களையும் பெரியவர்களையும் குழந்தைகளையும் பராமரித்துப் பார்த்துக் கொள்ளும் கூடுதல் பணிச்சுமையும் சேர்ந்து கொண்டது; நிலையற்ற வருவாய், வீட்டில் அதிகரித்த இல்ல வன்முறைகள் எல்லாம் பெண்களை மேலும் மேலும் நிச்சயமற்ற எதிர்காலத்தில் தள்ளியது.  
அதிகரிக்கும் வன்முறைகள் 
 தொற்று உலகமெல்லாம் இல்ல வன்முறை விகிதத்தை அபாயகரமாக அதிகரித்தது. பெண்களுக்கான இந்திய தேசியக் கமிஷன் தரும் புள்ளிவிபரப்படி, 2020 மார்ச் 2 முதல் 8 வரையான வாரத்தில் பதிவான 116 புகார்கள், மார்ச் 23 ஏப்ரல் 1 வாரத்தில் 257ஆக உயர்ந்தது; இவற்றில் 69 இல்ல வன்முறைகள். பெண்களுக்கு எதிரான 22 வகையான குற்றங்களில் 2020 ஏப்ரல் மே மாதங்களில் 3027 புகார்களும் அவற்றில் (47.2 சதவீதமான) 1428 இல்ல வன்முறைகளும் பெண்களின் நெருங்கிய துணைவர்களால் (intimate partner) நிகழ்ந்தப்பட்டது. 
 பெண்களுக்கு எதிரான வன்புணர்வு பாலியல் குற்றங்கள் என்றுமில்லாத கொடுமையாக அன்றாடச் செய்தி ஆகிறது. அதிகரிக்கும் இவ்வன்முறை நிகழ்வுகளையும் கொடுமைகளையும் மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. இந்திய உச்சநீதிமன்றம் உட்பட்ட நீதித்துறையின் மறுமொழி இதில் இன்னும் கவலையளிக்கும் கண்டனத்திற்குரிய போக்கு ஆகும். பெண்களின் பல ஆண்டு கால நீண்ட போராட்டங்கள் மற்றும் தியாகத்தால் சாதித்து வென்ற உரிமைகளையும், கொண்டு வரப்பட்ட சட்டங்களையும் நீதித் துறையே அவமதிக்கிறது. ‘இன்றைய’ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பெண்ணை அவளுடைய சொந்த அறிவின்படி சுதந்திரமான குடிமகளாகவும், சம உரிமையுள்ள மனுஷியாகவும் கருதாதது அதிர்ச்சி அளிப்பது. 
 மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘தேசிய குற்றப் பதிவு பீரோ’ (NCRB எனும் அரசின் முகமை) பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் முதல் இடத்தை வகிப்பது பாலியல் வன்முறையே என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது; அதிலும் குறிப்பாகத் தலித் பெண்களின் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. நிவாரணம் வழங்கும் அரசு இயந்திர அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து குழப்பத்தில் உள்ளன.
கல்வியிலிருந்து இடைநிற்றல்
 கோவிட்–19 பாதிக்கத் தொடங்கியதும் இந்தியாவின் கல்விமுறை வழமையான வகுப்பறை ஏற்பாட்டிலிருந்து, எந்தவிதக் கண்ணோட்டமும் திட்டமும் இல்லாமல், டிஜிடல் ஆன்-லைன் கல்வி முறைக்கு மாற்றப்பட்டது. சமுதாயத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெரும் டிஜிடல் பிளவை உண்டாக்கியதன் விளைவு, பேரளவிலான மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியைவிட்டு இடை நின்றார்கள். கடுமையான இப்பிரச்சனை ஒன்று இருப்பதாகவே மத்திய அரசு உணரவில்லை. இதைத் தீர்க்கும் வகையில் எல்லா குழந்தைகளும் ஆன்-லைன் கல்வியைப் பெறுவதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்துப் பாஜக தம்பட்டமடித்த போதினும், அதனை அமல்படுத்துவதற்கான வழிமுறைத் திட்டங்களுக்கு 2021-22 பட்ஜெட்டில் நிதி உதவி எதுவும் அளிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது மொத்த தேசிய உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.42 சதவீதம் மட்டுமே.
 ஊட்டச் ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகையின் அபாயகரமான விகிதம் 
 ‘விகாஸ் சம்வத்’ (வளர்ச்சிக்கான உரையாடல்) என்ற அரசுசாரா தன்னார்வ அமைப்பு ‘தேசிய குடும்ப நலச் சர்வே’ (NFHS)-5 என்ற ஆய்வறிக்கையில் 22 மாநிலங்களின் 18ல் இரத்த சோகை அபாயகரமாக அதிகரித்துள்ளதாக வெளியிட்டுள்ளது. உச்சபட்சமாக குஜராத்தில் 62.6 முதல் 79.7 சதவீதமாகவும்; அஸாமில் 35.7 முதல் 68.4 வரையிலும்; மகாராஷ்டிராவில் 53.8 முதல் 68.9 வரையிலும்; மேற்கு வங்கத்தில் 54.2 முதல் 69 சதவீதம் வரையிலும் உள்ளது. மற்றொரு புறத்தில், கோவா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 15 மாநிலங்களில் பேறுகால நிலையில் உள்ள தாய்மார்களில் இரத்த சோகை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கிறது. அந்த அமைப்பு 3வது சுற்றில் முன்பு நடத்திய (NFHS-3) சர்வேயைவிட தற்போது குஜராத்தில் 62.6 சதவீதமாகப் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல பீகாரில் முந்தைய 60.2 சதவீதத்திலிருந்து 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
 அதுபோலவே (NFHS-5) அறிக்கையில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பிரிவில் 22 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இருப்பது அப்பட்டமான மோசமான நிலைமையைப் படம் பிடிக்கிறது. 22ல் 13 மாநிலங்களில் குழந்தைகளின் நிலைமை பரிதாபகரமான அதிர்ச்சி அளிப்பதாகும். சிறுவயது குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற எடை இல்லாமல், சராசரி சர்வதேச தரத்தைவிட, மிகக் குறைவாக இருப்பதும்; அதுபோல வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் மிகவும் குறைந்து இருப்பதையும் (child wasting) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் நாடு முழுதும் 11 மாநிலங்களும், எடைகுறைவான குழந்தைகள் 14 மாநிலங்களிலும் மேலும் மோசமடைந்ததாக அறிக்கை பதிவு செய்கிறது. 
 மக்களின் உணவு மற்றும் ஊட்டச் சத்து தேவை குறித்து அரசின் கவனம் தொடர்ச்சியாக திசை மாறிச் சென்றதன் விளைவே மேற்கண்ட மோசமான நிலைமைக்குக் காரணம். மெல்ல மெல்ல இந்த நெருக்கடி மோசமடைய, பொது விநியோக முறை, அங்கன்வாடிகள், மதிய உணவுத் திட்டங்கள், பேறுகாலத் தாய்மார்களுக்கு உதவித் தொகைகள் வழங்கும் திட்டங்களை –கார்ப்ரேட் முதலாளிகளின் நன்மைக்காக – அகற்றி அரசு கைவிட்டதேயாகும்.  
பெண் தொழிலாளர்கள் இல்லாது போகும் நிலை
 கோவிட்-19க்கு முன்பே பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து மறைந்து போகும் நிலை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு இன்னும் அதிகரித்தது. அப்படிப் பெண் தொழிலாளர்கள் பணியாற்றியதே அமைப்பு சாரா பிரிவுகளில்தான்; அதுவும் 23.4 சதவீதத்திலிருந்து 2020ம் ஆண்டு 17 சதவீதமாகக் குறைந்தது.
   சமீபத்திய வேளாண் சட்டங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் மீது அரசமைப்பு ரீதியாகத் தொடுத்த மற்றுமொரு தாக்குதலாகும். அமலில் இருந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு குறுங்குறிகளாகச் சுருக்கியதும் தொழிலாளர்களிடம் கொஞ்ச நஞ்சமிருந்த உரிமைகளையும் உரித்தெடுத்துப் பறித்து விட்டது. 
பொறுப்பற்ற முறையில் தேசத்தின் செல்வம் கார்ப்பரேட்டுகளிடம் வாரி வழங்குதல்
 பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்கின்ற முக்கியமான சேவைகளை நம்பியே பெரும்பான்மை இந்திய மக்கள் உள்ளபோது, அரசு பைத்தியக்கார வேகத்தில் தனியார்மயம், கார்ப்பரேட் மயம் நோக்கி நெட்டித் தள்ளுகிறது; மேலும் நாட்டு மக்களுக்குச் சுகாதார மருத்துவச் சேவைகள் வழங்குவது, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தப்பி ஓடுவதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்க்கையை மேலும் பேரழிவுக்கு உள்ளாக்கியது. அதில் பெரிதும் பெண்களே பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாக, அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளே காரணம். பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே அதிகரிக்கும் இரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு இறுதியில் அவர்களைச் சப்தமில்லாமல் இனப்படுகொலை செய்வதில் முடிந்து விடும். 
 கரோனா தொற்று காலத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மனிதனும் வாழ்வாதாரத்தை இழத்தல், வருமானம் இழத்தலை உலகம் முழுவதும் சந்தித்தபோது, கார்ப்பரேட்டுகளின் லாபம் மட்டும் வானளாவ வளர்ந்தது அதிர்ச்சி அளிக்கவில்லையா? ஏதோ சிறிது சமூகப் பாதுகாப்பை அளிப்பது போல தோற்றமளித்த (உரிமை மற்றும் நலவாழ்வு வழங்கிய) சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை அரசு அகற்றி நீக்கியதன் மூலம், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டை வெறி மேலும் ஆதரவு உதவிகளைப் பெற்றது. 
சவால்களும் தடை உடைத்து முன்னேறும் வழியும் 
 இதுதான் நாட்டு மக்கள் முன், குறிப்பாகப் பெண்களுக்கு முன் உள்ள, உண்மையான சவால்: கார்ப்பரேட் – பாசிச அரசின் கூட்டை உடைத்து மேலும் பாலினச் சமத்துவ நியாயமுள்ள சமுதாயத்தைப் படைப்பது எவ்வாறு? கோவிட் சகாப்தத்துக்குப் பிறகான புதிய காலத்தின் அரசியல்முறை நிகழ்ச்சி நிரல் திட்டத்தில் பாலினப் பிரச்சனையை அனைத்துக்கும் முன் இடம்பெறுவதாக வைப்பதன் மூலமே இது சாத்தியமாகும். இது தானே நடந்து விடாது. அதற்கு, இன்றைய மனிதகுல சமூக பொருளாதார அரசியல் நெருக்கடி நேரத்தில் பாலினம் தொடர்பான கேள்விகளை உயர்த்திப் பிடித்து அங்கீகரிப்பதன் மூலமாகவும், கூட்டு உணர்வு பெறுவதும் அவசியமான தேவை. மேலும் மனுவாதி – ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சமரசமற்ற முறையில் இணைந்து போராடுவதும் தேவை. மேலும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒன்றாய் கரம் கோர்த்தல் வேண்டும்; எதற்காக? பெண்கள் அமைப்புகள், சுயேச்சையான பெண்கள் இயக்கம், குடிமைச் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் சமூகத்தின் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலான அனைவரும் முதலாளித்துவ, பாசிச மற்றும் ஆணாதிக்கச் சக்திகளைத் தோற்கடித்து நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவதும் தேவை. 
 தொற்று காலத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தனது புரட்சிகர சர்வதேசிய மகளிர் தின வாழ்த்துகளை ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக, தொற்றின் வைரஸ் கிருமி காரணமாக மட்டுமின்றி, எந்தவித சமூகப் பாதுகாப்பையும் வழங்காது முன்யோசனையற்ற ஊரடங்கு அமலாக்கியதாலும் பாதிக்கப்பட்ட கமலா போன்ற பெண்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 
 “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
  எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
  இளைப்பில்லை காண் என்று …
  பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!”
--நியூஏஜ் (மார்ச் 7 –13)
--தமிழில் : நீலகண்டன், 
தொடர்புக்கு 94879 22786         


No comments:

Post a Comment