.

Friday, August 28, 2015



வாழ்த்துகிறோம்!!

                 நமது அன்பிற்குரிய மாநிலத்தலைவர்  தோழர் M. லட்சம் அவர்கள்                   31-08-2015  அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரைப் பற்றி சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் மாவட்ட சங்கம் பெருமை அடைகிறது.

தனது எம்.ஏ படிப்பை குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் தனது மூத்த சகோதரரின் அறிவுரையின்படி சென்னை ITC கம்பெனியில் பணியில் சேர்ந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்குப்பின் 1983 ஜனவரி18-ல் தபால் தந்தி துறையில் அன்றைய தமிழ்நாடு வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்க பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கிளைச் செயலராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தோழர். காமராஜ் மீதான தாக்குதல், தோழர்கள் NK,SSK மீதான காவல்துறையில் பொய் புகார், காஞ்சி கோட்டச் செயலர் சங்கரன் மீதான காவல்துறை பிரச்னைகளை வென்றெடுக்க முன்நின்றவர்.

அதன்பின்பு மதுரை தொலைதொடர்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கம்பத்திற்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் கம்பம் கிளைச் செயலர், தொடர்ந்து மாவட்டச் சங்க நிர்வாகி, LJCM உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். இன்று NFTE  என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக மாண்போடு செயலாற்றி வருகிறார். அவரது செயல்பாட்டில் என்றைக்குமே ஊனம் தடையாக இருந்ததில்லை.

தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல தனது சொந்த ஊரில் பல்வேறு பிரச்னைகளுக்கு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமான, சுமூகமான தீர்வை சொல்பவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. திராவிட கொள்கைகளில் அழுத்தமான பார்வை கொண்டவர்.

தி.மு.கவின் தீவிரமான  தொண்டர் என்றபோதிலும் மற்ற கட்சியினரிடமும் கனிவாக பழகக் கூடியவர். தனது கட்சி சார்பாக தனி தொழிற்சங்கம் துவக்கப்பட்டபோதிலும் தனது இறுதிநாள்வரை NFTE இயக்கத்தில் தான் பணியாற்றுவேன் என தனது கட்சித் தலைவர்களிடம் ஆணித்தரமாக கூறியவர். அத்தகைய மனிதநேயமிக்க மாநிலத் தலைவர் தோழர். லட்சம் வரும் 31.08.2015 அன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

பணி ஓய்வு காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.....


NFTE-மாவட்ட சங்கம், கடலூர்

No comments:

Post a Comment