நெகிழ்வான நிகழ்வு
14/12/2015 திங்கள் கிழமை பிற்பகல் 4 மணி அளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலக வளாகத்தில் அனைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்த நிகழ்வு. அதை நாம் விழா எனச் சொல்ல விரும்பவில்லை. சங்கக் கொடியில்லை, தோரணங்கள் இல்லை, ஒலி பெருக்கி இல்லை, இதனால் எல்லாம் அது விழா அல்ல என்று நாம் சொல்ல வரவில்லை. அங்கே பறந்தது உதவி – ஒப்புரவுக் கொடி, மாவட்டங்கள் தாண்டி ஓடி வந்த பரிவு தோரணங்களாக, இதயங்களின் ஒலியே ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் நம் பங்கு இருக்க வேண்டும் என நன்கொடை வேண்டுகோள் விடுத்திருந்தோம். உதவும் கரங்களாக ஓடி வந்த தஞ்சை, சென்னைத் தோழர்கள் எடுத்து வந்தவை (சிதம்பரம் தோழர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் வழிகாட்டுதலின்படி) சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களிடம் நேரடியாக வழங்கப்பட்டன.
குடந்தைத் தோழர்கள் அனுப்பி வைத்த பொருட்கள் நமது மாவட்டத்தில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவது என 12—ம் தேதி நடந்த மாவட்ட செயலகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவைச் செயல்படுத்திய நெஞ்சில் பதிந்த நிகழ்வு வருமாறு:
அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பாதிப்பு பற்றி கேட்டறிவது, அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது, அவர்கள் எந்தச் சங்கத்தைச் சார்ந்தவராயினும் நிவாரண உதவி பெற அழைப்பது, அழைப்பை ஏற்று வந்த தோழர்களுக்கு உதவிப் பொருளோடு பயணப்படியும் வழங்குவது என்பதை வழிகாட்டுதலாகக் கொண்டோம்..
காரைக்குடிப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமையே வந்து விட்டன. திங்கட்கிழமை உதவிப் பொருட்களோடு குடந்தை,காரைக்கால் தோழர்கள் இருபது பேர் வந்திருந்தனர் என்பது மழையின் ஈரத்தைவிட அவர்களது இதயத்தின் ஈரம் பெரிது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் மழையின் ஈரம் காய்ந்து விட்டது, இதயத்தின் ஈரம் என்றென்றும் நம் நினைவில் பசுமையாய் இருப்பது அல்லவா! நமது நிர்வாகம் அவர்களுக்கு வாகனம் தந்துதவியது என்பது கூடுதல் சிறப்பு. மழையால் பாதிப்படைந்த சாலையில் அவ்வளவு தொலைவு மூட்டைகளின் மீது அமர்ந்து வந்தனர் என்பதை அறிய நாம் நெகிழ்ந்து போனோம். நம்மை அவ்வாறு காலம் காலமாக வளர்த்த நமது இயக்கத் தலைவர்களை நினைந்து நினைந்து போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் நமது சம்மேளனச் செயலாளர் தோழர் G.ஜெயராமன் சங்க அலுவலகம் வந்திருந்து குடந்தை, காரைக்கால் தோழர்களோடு கலந்துரையாடினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார். நமது மாவட்டத் தோழர்களிடம் நன்கொடை வசூல் பட்டியலைப் பார்த்ததும் அவர் செய்த காரியம் தனது பங்காக ரூபாய் இரண்டாயிரத்தை வழங்கியது.
நிகழ்வுக்கு TMTCLU மாநிலப் பொதுச்செயலாளரும் நமது மாவட்டத் தலைவருமான தோழர் R.செல்வம் தலைமை தாங்கினார். சம்மேளனச் செயலாளர் தோழர் ஜெயராமன், குடந்தை மாவட்டச் செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், நமது மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்த துணைப் பொதுமேலாளர் (நிதி) திருமிகு.சாந்தகுமார் அவர்கள் தங்களது வாழ்த்துரைகளைச் சுருக்கமாக வழங்கினர்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர் தோழர்களுக்கு மேலே குறிப்பிட்ட பெருமக்களும் மாநிலத் துணைத்தலைவர்
தோழர்.V.லோகநாதன், மூத்தத்தோழர் தமிழ்மணி, குடந்தைத் தோழர்கள் கணேசன், பாலகுமார், காரைக்கால்
தோழர் இருதய சவுரிராஜ் மற்றும் மயிலாடுதுறைத் தோழர்கள் உதவிப் பொருட்களை வழங்கினர். அதில் 5 கிலோ அரிசி, பிஸ்கட் பாக்கெட், கீழே விரிப்பாகப் பயன்படுத்தக் கூடிய தார்பாய், போர்வை, துண்டு, எவர்சில்வர் தட்டு, டம்ளர், சோப்பு, பிரஷ், பேஸ்ட், முதலிய பொருட்கள் இருந்தன. நமது சங்கம் வழங்குகிறது என்பதால் புறக்கணிக்காது வந்திருந்த தோழர்கள் நம்மைப் பெருமைப்படுத்தியது மட்டுமல்ல, நமது பாதை சரியானது என்பதையும் தமது செயலால் உணர்த்தினர். நன்றி தோழர்களே! வந்திருந்த ஒப்பந்த ஊழியர்களுக்குப் பயணப்படி வழங்கப்பட்டது.
மாவட்ட முன்னணித் தோழர்களுக்குப் பாராட்டு :
போன் மெக்கானிக் தோழர் ( மாற்றப்பட்ட கேடர் பெயரின் படி டெலிகாம் டெக்னீஷியன் ) குணசேகரன். பரந்த மனதுக்குச் சொந்தக்காரர். இயன்றபோதெல்லாம் உதவிப் பொருட்களைப் பெற்றுத் தருவதில் முன்நிற்பவரே தவிர, பெயர் வாங்க வேண்டும் என முன்நிற்பவர் அல்லர். இம்முறை காரைக்குடித் தோழர்கள் தந்த அரிசியோடு 10 மூட்டைகள் அரிசியை வழங்கினார். அதனால் தான் நம்மால் அனைவருக்கும் 5 கிலோ அரிசியாவது தர முடிந்தது. இல்லை இல்லை, அதனை முடித்து வைக்க TMTCLU மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் V.முத்துவேல் தோள் கொடுத்தார். அவர் மீண்டும் இரண்டு மூட்டை அரிசி வாங்கி வந்து தனது சார்பில் கொடுத்தார். நன்றி தோழர்களே நமது மற்ற மாவட்டத் தோழர்கள் தந்தார்கள் நாம் நம் கையால் வழங்கினோம் என்பதன்றி நமது பங்கும் இருக்கிறது என்பதை நிலைநாட்டியுள்ளீர்கள். நமது செயல்பாடு இனியும் தொடரும். நாளை கடலூர் சேவை இல்லத்திற்கு உதவியோடு செல்ல இருக்கிறோம்.
குடந்தை தோழர்கள் அளித்த ஒருபகுதியை அண்ணாகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாபுகுளம் கிராமமக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களை அதன் பஞ்சாயத்துத் தலைவர்
திரு.குமார் அவர்களிடம் வழங்கினோம்.
மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டிற்கு உங்களுடைய ஒத்துழைப்பே காரணம். நன்றி சொல்ல வார்த்தை இல்லை, வாழ்த்துக்கள் தோழர்களே ! தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிப்போம் சமூகப் பொறுப்புணர்வோடு NFTE மரபுகளை தாங்கிய வண்ணம்! மீண்டும் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment