.

Friday, May 5, 2017

மனித குலத்தை விடுவிக்க வந்த மாமுனி!


மார்க்ஸ் எனும் மாபெரும் சிந்தனையாளர் 1818-ஆம் வருடம் மே 5-ஆம் நாள் பிறந்தார். மார்க்ஸ் பிறந்தபோது, ஜெர்மனி முப்பத்து எட்டு சுதேச மன்னர்களின் ஆட்சியின்கீழ் பிரிந்து கிடந்தது. அவை, அன்றைய வியன்னா ஒப்பந்தப்படி, ஜெர்மனி, பிரெஷ்யா என பிரிக்கப்பட்டன. ஜெர்மனியில் இருபது சிற்றரசர்களின் ஆட்சியும், பிரெஷ்யாவில் 18 சிற்றரசர்களின் ஆட்சியும் நீடித்தன.இதில் ரைன் நதி பாயும் ரெயின்லாண்ட் பகுதியில் டிரியர் எனும் நகரத்தில்தான் மார்க்ஸ் பிறந்தார். அப்பகுதியில் இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன. வேளாண்மையும்செழிப்பாக  இருந்தது. அங்குதான்,    தனது   17-ஆவது வயது வரையில் மார்க்ஸ் தமது படிப்பை பெற்று வந்தார்.அது பிரெஞ்சுநாட்டின் எல்லையோரத்தில்,  லியான்ஸ் மாகாணத்திற்கு அருகில் அமைந்திருந்த பகுதி. அங்கு தொழில் புரட்சியின் விளைவாக அமைந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து, தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்கள். அவர்கள் 'உழைத்துப் பிழைப்போம் அல்லது போராடியே மடிவோம்' என்ற முழக்கத்தை எழுப்பினார்கள்.
அப்போராட்டங்களை கவனித்த ரூசோ, ஹாப்ஸ், வால்டேர் போன்றோர், 'சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்' என்ற முழக்கங்களை எழுப்பினர். அவை ஜெர்மனியிலும் எதிரொலித்தன. அப்போது போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் எனும் சிந்தனையாளர், தர்க்கவியல் மூலம் ஜெர்மானிய தத்துவங்களை ஆய்வு செய்து எழுதினார்.அதில் கற்பனாவாத சோசலிசம் மறுக்கப்பட்டு, பொருள்முதல்வாத கருத்தோட்டம் விளக்கப்பட்டிருந்தது. ஆனால் 'தேவனின் சித்தப்படியே மனிதர்களின் சிந்தனையும், செயல்பாடுகளும் அமைந்துள்ளது' என்று எழுதினார். மார்க்ஸ், அப்பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேருவதற்கு பதினைந்து ஆண்டுகட்கு முன்னரே, பல்கலைக்கழகத்திலிருந்து ஹெகல் விலகி விட்டார். ஆனால், அறுபது முதல் எழுபது விழுக்காடு மாணவர்கள் தங்களை ஹெகலியவாதிகள் என்று அழைத்துக் கொண்டனர். மார்க்ஸும் அந்தக் குழுவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.ஹெகலைப் பின்பற்றிய மாணவர்கள் மென்மைச் சிந்தனையாளர்கள் - தீவிரச் சிந்தனையாளர்கள் என இரு குழுக்களாகப் பிரிந்தனர். அதில், இடது பக்கம் சாய்ந்தார் கார்ல் மார்க்ஸ். இந்த கட்டத்தில், பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு போய்ச் சேருமாறு மார்க்ஸின் தந்தை பரிந்துரைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மார்க்ஸ், சட்டம் மற்றும் மூன்று பிறமொழிகள் ஆகியவற்றுடன் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்ய கிரேக்க சிந்தனையாளன் எபிகுரஸ்ஸின் சிந்தனையை எடுத்துக்கொண்டார்.கிரேக்க ஞானியான எபிகுரஸ், கடவுள் மறுப்பாளர். பிரபஞ்சத்தில் காணப்படும் அணுக்களின் சேர்க்கை, மோதுதல் ஆகியவற்றால்தான் உலகம் இயங்கி வருகிறது என்ற கருத்தை வெளியிட்டார். புலுடார்க் எனும் ஆன்மீக சிந்தனையாளனுடன் நடத்திய விவாதத்தின்போது, 'மனிதன்தான் கடவுளுக்கு கோயில் கட்டியிருக்கிறான்; தன் வடிவத்திலேயே ஒரு கற்சிலையை அல்லது பொற்சிலையை வடித்து, அதற்கொரு பெயரும் இட்டு, கடவுள் என அழைப்பதை நான் கண்டிருக்கிறேன். ஆனால், கடவுள் மனிதனைப் படைத்தார் என்பதை நிறுவிக் காட்ட முடியுமா' எனக்கேட்டவர் எபிகுரஸ். இவரது கருத்தை உளறல் என்று ஆன்மிகவாதிகள் முத்திரையிட்டனர். மார்க்ஸின் ஆய்வுக் கட்டுரையை மதிப்பிட்ட பேராசிரியர்கள், முனைவர் பட்டத்தை மகிழ்ச்சியோடு வழங்கினர். டாக்டர் பட்டம் பெற்ற மார்க்ஸ், விடுமுறையின்போது, தான் காதலித்த ஜென்னி ஜான் பெஸ்ட் பாலனை சந்தித்தார்.
ஜென்னி, 1814-ஆம் ஆண்டு பிறந்தவர். மார்க்ஸுக்கு நான்கு வயது மூத்தவர். 1843 ஜூன் 19-ஆம் தேதி இவர்களின் திருமணம் பதிவாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்கள் பரிமாறிக்கொண்ட காதல் கடிதங்கள் கவித்துவம் மிக்கதாகவும், வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பதாகவும் இருந்தன. மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில், 'வசதிகளோடு வாழ்ந்து பழகிவிட்ட நீ, என்னோடு வாழும்போது துன்ப துயங்களை தாங்க வேண்டியிருக்குமே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்' என்று எழுதினார்.ஜென்னி 'தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறவர்களுக்குத்தான் துன்பங்கள் அதிகரிக்கும். ஆனால் நீங்களோ, மனித குலத்தின் முழு விடுதலைக்காக பாடுபடுவதால் துயரங்களைத் தாங்கும் வலிமை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நானும் அதில் பங்கேற்பதால் எனக்கும் துயரங்களைத் தாங்கும் மன உறுதி உண்டு' என்று எழுதினார்.திருமணமான சில மாதங்களுக்குள் மார்க்ஸை அந்நாட்டு அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியது. நாடு கடத்தும் உத்தரவும் வந்தது. அவர் மட்டும் பெல்ஜியத்திற்குப் போய் தங்கினார். அங்கிருந்தபோது, 'கம்யூனிஸ்ட் லீக்' என்ற அமைப்பை உருவாக்கினார். சில முற்போக்காளர்களை இணைத்து ஒரு பத்திரிக்கை தொடங்க திட்டமிட்டார். ஆனால் அரசியல் தஞ்சமடைந்திருந்த அகதி என்பதால் நிதிபெற முடியவில்லை.
ஆனால், சில சீர்திருத்தவாதிகள் நடத்திவந்த பொது பத்திரிக்கைகளில் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வந்தார். அவை, அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக இருந்ததால், அங்கிருந்தும் நாடு கடத்தப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் வாழும் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடியேறினார்.ஜென்னி மார்க்ஸ், தன் ஆடைகள் சிலவற்றையும், தன் திருமண பரிசுப் பொருள்களையும் விற்றுப் பெற்ற சிறிய தொகையோடு மார்க்ஸிடம் வந்து சேர்ந்தார். சிறிது காலத்தில் கர்ப்பவதியான ஜென்னி, இன்னல்கள் மிகுந்த சூழலில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்.அந்தக் குழந்தைக்கு ஜென்னி என்று பெயரிடப்பட்டது. அது பிறந்தபோது தொட்டிலும் இல்லை; இறந்தபோது புதைக்க பெட்டியும் இல்லை. அடுத்த மகள் லாராவும், அதேபோன்று வறுமையில் வதங்கி வாழ்ந்து முடிந்தார். மூன்றாமவர் எலியனார் மட்டும்தான் தாய் - தந்தை மறைவுக்குப் பின்னும் வாழ்ந்தவர்.ஒவ்வொரு நொடியும் சித்திரவதைக்குள்ளாகவே காலத்தைக் கழித்தவர் மார்க்ஸ். அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது, இவை அனைத்தையும் மறந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதுதான் வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. அவர் மறைந்த போது, அன்றும் இறுதிக் கடமைகளை நிறைவேற்றியவர் ஏங்கல்ஸ் தான். இரங்கல் உரை ஆற்றிய பிரடரிக் ஏங்கல்ஸ், 'மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்' என்று கூறினார்.அவர் மறைந்த பிறகு 'மூலதனம்' நூலை வெளியிடுவதிலும் முழுப்பங்காற்றிய ஏங்கல்ஸ், 'கடந்த பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டிருந்த காலங்களில் மார்க்ஸ் புகைத்துச் சாம்பலாகத் தட்டிய சுருட்டுக்களின் விலை அளவிற்குக்கூட, அவர் பலனை எதிர்பார்க்கவில்லை. அவர் எழுதிய நூல்கள் எல்லாம் காணாமல் போய் 'உபரி மதிப்புக் கோட்பாடு என்ற பொருளியல் கோட்பாடு மட்டுமே மிஞ்சியிருந்தாலும் யுகயுகாந்திரங்களுக்கு அவரது அறிவாற்றலைக் காட்ட அது போதுமானதாகும்' என்றும் கூறினார்.
அக்கூற்றை நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இங்கிலாந்து 'அரசியல் தஞ்சம்' வழங்கியிருந்தாலும், மாதா கோயிலாலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் - லண்டன் ஹைகோர்ட்டில் } மார்க்ஸை புதைக்க இடம் ஒதுக்கினர்.

1941-
ஆம் ஆண்டு வரை, உலக அளவில் அதிகமாக அச்சிடப்பட்ட நூல் எது எனக் கணக்கிட்டபோது விவிலியம் என்ற வேத புத்தகம் தான், அதிக நாடுகளில் அதிக மொழிகளில், அதிக அளவிலான பிரதிகள் அச்சிடப்பட்டதாகக் கூறப்பட்டது. 2016-இல் எடுத்த கணக்கின்படி, மார்க்ஸை ஆதரித்தும் எதிர்த்தும் எழுதப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 1990-களில் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கலைந்து போனது. அதேபோல் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகள் சில நாடுகளில் அமைத்த ஆட்சியும் நிலைகுலைந்தன. இந்தியாவிலும்கூட, தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் பின்னடைவைச் சந்தித்ததை வைத்து மார்க்ஸின் இயக்க இயல் பொருள் முதல்வாத தத்துவம் தோற்றுவிட்டது என்று பலரும் எழுதி, பேசி வருகின்றனர்.உலக அளவில் நாற்பதுக்கும் அதிகமான நாடுகளில், கம்யூனிஸ்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இரு கம்யூனிஸ்டு மந்திரிகள் பொறுப்பேற்றுள்ளனர். வேறு பல நாடுகளிலும் மக்களால் கம்யூனிஸ்டு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நேபாளத்தில் அமைந்தது போல், இந்தியாவிலும் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்ததையும் கண்டோம். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் கண்டால், அதை வைத்து தத்துவம் தோற்றது என்று கூறுவது விஞ்ஞான ரீதியில் சரியான தீர்ப்பு ஆகாது.
 இன்று கார்ல் மார்க்ஸின்  200- ஆவது பிறந்த நாள்.
கட்டுரையாளர்:மூத்ததலைவர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

No comments:

Post a Comment