.

Thursday, October 5, 2017

துணை டவர் கார்பரேஷன் -- எதிர்ப்பு ஏன்?
(அக்டோபர் மாத டெலிகாம் தலையங்கம்)
தமிழாக்கம்: வெ.நீலகண்டன்-கடலூர்
        BSNL நிறுவனத்தின் செல் கோபுரச் சொத்துக்களைப் பிடுங்கி தனி துணை நிறுவனமாக்கப் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. துணை நிறுவனம் BSNL க்கு முழு உரிமை உடையதாகவே இருக்கும்செப்டம்பர் 12 ம் தேதிய அரசு பத்திரிக்கை குறிப்பு சொல்கிறது, ’இந்த ஒப்புதலால் செல் கோபுரங்களைப் பயன்படுத்தி இனி BSNL துணை டவர் நிறுவனம் அமைக்கவும் வணிகமும் செய்யலாம்’. அரசு ஒரு வகையில் போர் தொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்அமைச்சரவை முடிவை இந்திய அரசு பெருமிதத்தோடு அறிவிக்கிறது:  BSNL நிறுவனம் தன்வசமே பிடித்து வைத்திருந்த 66 ஆயிரம் டவர்களை விடுதலை செய்து விட்டதாம். மொத்த டவர்களில் 15 சதம் BSNLக்குச் சொந்தமானது; அதைக் கொண்டு, 2012 புதிய டெலிகாம் பாலிசியை அமலாக்கவே இந்தக் கைப்பற்றலாம். பொருளாதாரத்தை மிக உயரத்திற்கு உயர்த்தவும், செல் சேவைக்கான முதலீட்டுச் செலவைக் குறைக்கவும் தனித்துவமான வணிக முன்மாதிரியை ஏற்படுத்துகிறதாம். அரசு காரணங்களை அடுக்குகிறது.
இனி என்ன செய்ய வேண்டும் என அரசு BSNL- வற்புறுத்துகிறதுஉனது டவர் சொத்துகளை உடனே காசாக்கு. அப்படிச் செய்தால் என்ன நடக்கும்டவருக்கு உரிமை உடைய BSNL க்கு முதலீட்டாளர்கள் மூலம் பணம் வரும், டெவிடென்டாகஆனால் முதலீடு செய்தவர்கள் சும்மா இருப்பார்களா? வழக்கத்தில் நடைமுறையில் இருப்பதை நாம் அறிவோமே ! Initial Public Offer (IPO) ஷேர்களை விற்பதன் மூலம் அல்லது குயுக்தியான வழிகளின் மூலம் தங்கள் முதலீட்டைப் பன்மடங்கு பெருக்க நினைப்பார்கள் அதாவது துணை டவர் கார்பரேஷனை முழுங்க முயல்வார்கள். இந்தக் குயுக்தியான யோசனையைச் சொன்னவர்கள் KPMG ஆலோசகர்கள் (டெலாயிட்டி போன்ற ஒரு ஆலோசனை நிபுணர் குழுமம், நிதி மற்றும் அமைப்பு மாறுதல்கள் பற்றி உலகளாவிய நிபுணத்துவ ஆலோசனை வழங்குபவர்கள், முதலாளித்துவ கருத்துநிலை சார்ந்தவர்கள் எனச் சொல்லத் தேவையில்லை) சொன்ன பல யோசனைகளில் ஒன்று தான்  இந்தப் பொதுத்துறை நிறுவன அமைப்பு போலத் துணை டவர் கார்பரேஷனை முதலில் அமைப்பதுபின்னர் குறுகிய காலத்தில் மேலே குதிரை சவாரி செய்ய ஒரு பங்குதாரரைச் சேர்த்துக் கொள்வது.
சுவரில் தெளிவாக எழுதப்பட்டிருப்பது இதுதான்: புதிய துணை கார்பரேஷன் வெகுவிரைவில் பங்கு விற்பனை செய்யப்படும்! ரிலையன்ஸ் போல ஒரு ஸ்டாடர்ஜிக் பங்குதாரர் இணைத்துக் கொள்ளப்படுவார்மக்களின் பொதுச் சொத்தைச் சட்டப்படித் தனியார் திருட்டுப் பூனைக்கு இரையாக்கும் ஒரு பொருளாதார மடைமாற்று வழிமுறை இது! டவர் கார்பரேஷன் குறித்து தேவைக்கதிகமாகவே ஆர்வம் காட்டும் பல பகுதியினர் இந்தப் புதிய துணை நிறுவனத்தின் 17 ஆயிரம் டவர்களை ரிலையன்ஸ் ஜியோவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை ஒன்றே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற அவர்களின் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது; நமது அச்சத்திற்கு வலுவூட்டுகிறது.
KPMG அமைப்பின் ஆலோசனைகள் பற்றி CMD--யுடன் சங்கத்தலைவர்கள் விவாதித்தபோதே: துணை டவர் நிறுவனம் முதலிய இந்த யோசனைகள் அமலானால் மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கு வெகு உதவியதாக இருக்கும் என்று நமக்கு மிட்டாய் கொடுக்க முயற்சித்தார்கள்.  ஒட்டுமொத்தத் தொழிற்சங்கத் தலைவர்களும் அந்தக் கருத்தைத் தயக்கமின்றி முற்றாக நிராகரித்தார்கள்கடுமையாக ஒன்றாக எதிர்த்தார்கள்.
2015 டெலாயிட்டி கமிட்டி விவாதங்களின் போதே இந்த முயற்சி அரும்பத் தொடங்கியதுசெல் கோபுரங்கள் போன்ற உள்கட்டமைப்பு ஆஸ்திகளை பயனுள்ள வகையில் BSNL வருவாயைப் பெருக்கப் பயன்படுத்தலாம் என்று நிர்வாகத் தரப்பு யோசனையாக முன் வைத்தனர். பிறகு அரசு கொள்கையளவில் ஒப்புதல் தந்து பென்ஷன் துறை உள்பட பல்வேறு துறை அமைச்சகங்களின் கூட்டுக் குழுக்களை அமைத்து துவக்கநிலையில் ஆராய DOT --க்கு வழிகாட்டுதல் தந்தது. அதே வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் இவை நடந்தபோது BSNL --ஐச் சார்ந்த எந்தப் பிரதிநிதியும் இந்தக் குழுக்களில் இடம் பெறவில்லை. நமது NFTE சங்கம் தலையிட்ட பிறகே BSNL பிரதிநிதி இக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்
துரதிருஷ்டவசமாக சங்கங்களுக்கு எந்த விவரமும் தரப்படவில்லை. அமைச்சர்களின் குழுக் கூட்டத்திற்கு BSNL--சார்பாக என்ன கருத்து முன் வைக்கப்பட்டது என்பது குறித்த குறிப்புகளோ, என்ன விவாதிக்கப்பட்டது, என்ன முடிவு சிபார்சாக கேபினட் நோட் தயாரிக்க அனுப்பப்பட்டது என எதுவும் சங்கப் பிரதிநிதிகளிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இது ஜனநாயக விரோதமான நடவடிக்கை; சுதந்திரமான ஆரோக்கியமான விவாதங்கள் மறுக்கப்பட்டு முடிவுகள் மூடிய கதவுக்கு பின்னே எடுக்கப்படுவது தொழில் அமைதியைக் கெடுக்கும்; ஊழியர்கள் அதிகாரிகள் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வை, பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். இது குறித்து பொருத்தமான பல்வேறு அச்சங்களை, ஐயங்களை நமது NFTE சங்கம் BSNL மற்றும் DOT –க்கு கேள்விகளாக எழுப்பியுள்ளது. எந்தக் கேள்விக்கும் எந்த பதிலையும் நிர்வாகத்தின் எந்த அதிகாரியும் தரவில்லை. BSNL—ன் நிதி ஆதார ஸ்திரத் தன்மைக்கு உத்தரவாதமோ, ஊழியர்களின் நலன்கள் காக்கப்பட உறுதிகளோ தரப்படவில்லை. புதிய துணைக் கம்பெனிக்கு அனுப்பப்படவுள்ள ஊழியர்கள் அதிகாரிகளின் பணிநிலைமை தாய் நிறுவனமான BSNL--லுடன் அவர்களுக்குரிய உறவு எதிர்காலத்தில் எப்படி அமையும் என எதுவும் ஊழியர்களுக்கோ அல்லது ஊழியர் சங்கங்களுக்கோ விளக்கப்படவில்லைஇது குறித்து நாம் முன் வைக்கும் கேள்விகள் வருமாறு:
1. எதிர் காலத்திலும் புதிய துணை டவர் கம்பெனி முழுமையாக 100 சதவீதம் BSNL—க்குச் சொந்தமானதாக அரசு பொதுத் துறையாக நீடிக்குமா? அதற்கு என்ன உத்தரவாதம்? டவர் கம்பெனி சொத்துகள் மீது DOT –க்கு உள்ள உறவு / உரிமை என்ன?  
2. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு டவர் பகிர்மானத்தில் முன்னுரிமை அந்தஸ்து தரப்படுவது ஏன்? குயுத்தி பங்குதாரராக ரிலையன்ஸ் ஜியோவை இணைத்துக் கொள்வதற்காகவா? ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியாக டவர் அமைப்பது என்ற திரும்பத் திரும்ப செய்யும் ஒரேவகை முதலீட்டுச் செலவைக் குறைப்பது என்ற யோசனை பொதுத்துறை அவலும் தனியார் உமியும் இணைந்து ஊதி தின்னலாம் என்ற கதையா? கயமையா?
3. நிதி ஸ்திரத்தன்மை பற்றி பிரச்சனைகள் உண்டு. தாய் நிறுவனத்திற்கும் புதிய துணை நிறுவனத்திற்குமிடையே என்ன உறவு? தொப்புள் கொடி பாதுகாப்பு உறவு நீடிக்குமா இல்லையா? எதிர்காலத்தில் துணை நிறுவனம் பங்குவிற்பனை செய்யப்படுமென்றால் திரட்டப்படும் பங்குவிற்பனைத் தொகை தாய்நிறுவனமான BSNL –ஐச் சேருமா அல்லது DOT –க்கு உரிமை உடையதாகுமா?
4. MTNL துணை நிறுவனங்களின் அனுபவம் என்ன? MTNL ன் துணைநிறுவனங்கள் அளவில் சிறியவை; மேலும். ஊழியர்கள் டெபுடேஷனில் மட்டுமே அனுப்பப்பட்டார்கள். BSNL பொருத்தவரை பெரிய அளவிலான இடம் பெயர்தலாக இருக்கக் கூடும்.
5. ஊழியர் பிரச்சனைகள்ஊழியர்களின் விருப்பம் கேட்கப்படாமல் எந்த ஊழியரும் புதிய கம்பெனிக்கு அனுப்பப்படக் கூடாது.
6. விருப்பம் தெரிவித்தவர்களின் சேவை பணி நிலைமை விளக்கப்பட வேண்டும். அரசு வழங்கும் அரசுப் பென்ஷன் மற்றும் இன்று BSNL ஊழியர்களின் உரிமைகள் பணி பாதுகாப்பு, எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய சலுகைகள் புதிய கம்பெனியில் நீடிக்க வேண்டும். பென்ஷனர் மற்றும் பென்ஷனர் நலத்துறை  குறிப்பு இது குறித்து கூறுவது என்ன?
7. விருப்பம் தெரிவித்தவர்கள் எதிர்காலத்தில் விரும்பினால் மீண்டும் தாய் நிறுவனத்திற்குத் திரும்பும் உரிமை
8. தனித்த டவர் கம்பெனி அமைப்பதால் BSNL நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை பாதிக்கும், நட்டத்தை ஏற்படுத்தும் என்றால் நட்டஈடு வழங்கப்படும் என்பது போன்ற  அமைச்சரவை முடிவுக்கு என்ன உத்தரவாதம்அத்தகைய நிலைமையில் அது கடுமையான ஊழியர் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
        இந்த நிலையில் BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களைப் பிரித்துத் தனி துணைக் கம்பெனி ஏற்படுத்துவது ஒரு வெட்டி வேலை/ பயன்தராத வீணான வேலை ; அது எந்த வகையிலும் BSNL --ன் வருவாயை / முதலீட்டுநிதித் தேவையைப் பூர்த்தி செய்ய உதவாது என நமது சங்கம் உறுதியாகக் கருதுகிறது. இது ஒரு தற்கொலை முயற்சியே தவிர வேறில்லை.  
        காட்டில் மேட்டில் பனியில் குளிரில் கம்பி இழுத்து…  … நமது கடுமையான உழைப்பில் உருவான சொத்துகளைக் காய்லாங்கடை விலைக்குத் தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு விற்றுவிடும் முயற்சிஊழியர்களும் என்ன ஆகும் என்று தெரியாத நிச்சயமற்ற எதிர்கால இருளில் தவிக்க முடியாது, அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகம். நேரத்துக்கு நேரம் நாளுக்கு நாள் மாறும் அரசின் கொள்கைகளால் அழுத்தத்திற்குள்ளாகும் BSNL/DOT நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் பலியாக முடியாது

        சீறி வரும் காளையை அடக்கத் தோள் தட்டிக் கச்சையை வரிந்து கட்டும் இளைஞனாய் சவாலை முறியடிக்க அனைத்து சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றிணைந்து களம் காண NFTE சங்கம் அறைகூவி அழைக்கிறது. புதிய துணை டவர் கம்பெனி சாகஸத்தில் குதிக்கும் முன் முழுமையாக விவாதிக்க வேண்டும் NFTE மத்திய சங்கம் BSNL/ DOT அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது, ”வருமுன்னர் காவாதான் வாழ்க்கைதீயில் வீழ்ந்த தூசு போலாகும்; ”எண்ணித் துணிக கருமம்என ஆயிரம் எச்சரிக்கை வாசகங்கள்ஊழியர்களின் நியாயமான சந்தேகங்களை அச்சங்களைப் போக்குவது கடமை என வலியுறுத்துகிறோம்அச்சம் அமைதியின்மை ஏற்படுத்தும், தொழிலமைதி சீர்குலையும்தறிகெட்டு செலுத்த நினைக்கும் அரசின் கொள்கைக்குச் சிந்தித்துத் தடை ஏற்படுத்துங்கள், நிமிர்ந்து நிற்கும் தேரின் கோபுரக் கலசம் கவிழாதிருக்கட்டும்! வாருங்கள் தேரின் வடம் பிடிப்போம். இது நமது தேர்!

No comments:

Post a Comment