.

Thursday, August 14, 2014

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை - தமிழ் விழா 11-08-2014

தமிழ் மணம் கமழ்ந்த விழா

அனைத்து வகையிலும் மன நிறைவான விழா. குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது தொடங்கி  நிறைவடைந்ததது வரை நெஞ்சில் என்றும் அசைபோடும் வகையில் அமைந்தது 15-ம் ஆண்டு சிரில் நினைவு அறக்கட்டளை கடலூரில் 11-08-2014- ல் நடத்திய தமிழ்விழா.
                சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்ட வெற்றியின் எதிரொலியாய் தோழர்களின் உற்சாகமான நிறைவான பங்கேற்பு அடுத்த வெற்றிக்குக் கட்டியம் கூறியது.
அறக்கட்டளை தலைவர் க. சீனிவாசன் தலைமையேற்க செயலர் வீ. லோகநாதன் வருகை தந்த தமிழ் சான்றோர்களை விளித்தும் சென்ற 14 ஆண்டுகளில் பங்கேற்ற தமிழ் சான்றோர்களை நினைவூட்டியும் வரவேற்புரையாற்றினார்.
                விழாவுக்கு முதல் நாளில் மரணமடைந்த NFTE  மாவட்டச் சங்க உதவிச் செயலர் தோழர் K. பாண்டியன் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
                நீண்ட காலம் கடலூர் பகுதியில் பணியாற்றி சென்னையில் ஒய்வுபெற்றவரும் அறக்கட்டளையைத் தனது இலக்கிய ஆளுமையால் ஒருங்கிணைத்தவருமான அன்பிற்கினிய தோழர் எஸ்ஸார்சி பாராட்டு விழா முதல்  நிகழ்வு. NFTE  மேனாள் மாவட்டச் செயலர் P.சுந்தமூர்த்தி எஸ்ஸார்சியின் அறக்கட்டளைப் பணியையும், ஆலோசனைகளை பெரிதும் மதிக்கும் பாங்கையும் எடுத்துக்  கூறி பாராட்டினார். அடுத்து கூத்தப்பாக்கம் இலக்கியச் சோலை தலைவர் பாச்சுடர் வளவ. துரையன், அலுவலகம், சங்கம் தாண்டி எஸ்ஸார்சியின் இலக்கியப் பணிகளையும், அவர் பெற்ற பரிசுகளையும், விருது பெற்ற நிகழ்வையே ‘ ஜரிகண்டி ‘ என்ற சிறுகதையாக்கிய விதத்தையும் எடுத்துரைத்தார்.
        எஸ்ஸார்சி  தமது எற்புரையில் கடலூர் மண்ணின் பெருமைகளையும், அறக்கட்டளையில் தமது பணி பாராட்டபடுவதற்கு NFTE சங்கமும் தோழர்களுமே காரணம் என்றார். எஸ்ஸார்சிக்கு அறக்கட்டளைத் தலைவர்  பொன்னாடை அணிவிக்க , தோழர் V. இளங்கோவன் நினைவுப் பரிசு வழங்கினார். பல தமிழ் அமைப்புகளும் அவருக்கு மரியாதை செய்தனர்.
        அடுத்த முக்கிய நிகழ்வு மாணவர்களுக்குப் பரிசளித்தல். நமது முதுநிலை பொது மேலாளர் திரு பூ.சந்தோசம் ITS. அவர்கள் தமது  பல்வேறு மாவட்டங்களின் கூடுதல் பொறுப்புகளுக்கிடையில் நமது விழாவுக்கு வந்திருந்து பெருமை சேர்த்தார் . +2 முதல் பரிசாக ரூபாய் 2000/-யும் மற்றும் சான்றிதழையும் செல்வி ச.நர்மதாவுக்காக அவரது தந்தை திரு V.சங்கர் SDE. VDC. அவர்களும், இரண்டாம் பரிசு ரூ1500/- யும் சான்றிதழையும் செல்வன் இரா.பரத் அவர்களுக்காக அவரது தந்தை தோழர் பா. இராமலிங்கம் SSS,KAC  அவர்களும். பத்தாம் வகுப்பு முதல் பரிசு செல்வி அ.கயல்விழியின் தந்தை திரு. அன்பழகன் DE/TNV. அவர்களும், இரண்டாம் பரிசாக செல்வன் தி. தினேஷ்குமார் தனது தந்தை தோழர் மு.தினகரன் TTA/CDL. மற்றும் தாயாருடன் நேரில் வந்து பெற்றார். பரிசு பெற்றவர்களுக்குச் செந்தமிழ்ச்சோலை சார்பில் பெரியவர் புலவர் அரங்கநாதன், பாரதிதாசன் மன்றத்தின் ஓய்வு பெற்ற GMஅலுவலக  தோழர் கடல் நாகராசன் அவர்களும், நமது தோழியர் மைதிலி அவர்களும் புத்தகங்களைக் கூடுதலாகப் பரிசளித்தனர்.
        சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தாற் போல் , நமது பொது மேலாளர் பரிசளித்தது மட்டுமல்லாமல் தமது உரையில் நமது தொலைத்தொடர்பு மாவட்டத்தின் வருவாய் இவ்வாண்டு பெருகி உள்ளதற்கு – பெரும்பான்மை உறுப்பினர்களை உடைய சங்கம் என்ற வகையில் – NFTE  தோழர்களின் பங்கு பெரிது என பாராட்டினார். மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வளர்ச்சிகளைப் புள்ளி விவரத்துடன் பட்டியிலிட்டார். தமிழ் கவிதை வரிகளின் மேற்கோள்களுடன் தமிழின் பெருமையை எடுத்துக் கூறி தமிழ்விழாவை வாழ்த்தினார்.
        பின்னர் தோழர். ப. செந்தில்குமரன் SDE/CDL, அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்க,           தோழர் .கெ. சதாசிவம் AO(CMTS) /CDL அவர்கள் மத்திய அரசு சமஸ்கிருதத்தை காட்டிலும் ஏனைய மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யும் பாரபட்சத்தை கண்டித்தும், தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம் குறித்தும் கூறினார். காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் வெ.மாரி Sr.AO அவர்கள் காரைக்குடித் தமிழில் நம்மை கட்டிப்போட்டார். தமது உரையில் இன்றைய மாணவர்கள் CUT-OFF மதிப்பெண்ணுக்குக் கவலைபடுகிறார்களே தவிர, தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற ஆற்றாமையை வெளிப்படுத்தி, விவசாயி வளர்த்த குதிரையும் ஆடும் கதையைச் சுவைபடக் கூறி      வீழ்வது நாமாயினும் தமிழை , சங்கத்தை, BSNL-ஐ வாழ வைப்போம் என்றார். 15 ஆண்டுகளாகச் சிறப்பாக விழா  நடத்துவது பெரும் சாதனை என கடலூர் மாவட்ட சங்கத்தைப் பாராட்டினார்.
        இறுதியில் இவரது இடி முழக்கம் கேட்டுத்தான் மழை வந்ததோ என்று என்ணும் வண்ணம் அருமைத் தோழர் திருப்பூர் கே. சுப்புராயன் (மேனாள் பாராளுமன்ற உறுப்பினார், AITUC –ன் மாநிலத் தலைவர்) சிறப்புரையாற்றினார். அவருக்கு மாவட்ட சங்க அமைப்புச் செயலர் தோழர் A.C.முகுந்தன் அவர்கள் பொன்னாடை அணிவிக்க , மாவட்டச் செயலர் நினைவுப் பரிசளித்தார்.
        தோழர் சுப்புராயன் ‘காலத்தின் குரல் என்ற தலைப்பிலான தமது உரையில் நமது விருப்பங்கள் விழைவுகள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. நமது இதிகாசங்கள், உலக இலக்கியங்களில் இல்லாத நல்ல செய்திகளா? ஆனால் அவை நடைமுறைக்கு வந்ததா ? காலம் கலி காலம் அல்லவா! கள்ளுண்ணாமையை எழுதிய வள்ளுவரின் குறளை சட்டமன்ற துவக்கத்தில் படிப்பதும், சிலை வைப்பதும் போலித்தனமல்லவா? பாராண்ட மன்னர்களின் மணி மகுடங்களும், மண்டையோடுகளும் நமது காலடிக்கு கீழ் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. உழைப்பவனுக்கு வாக்குரிமை மறுத்த ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும் விழாக்கள் எடுப்பது சரியா? வரலாறு என்பது உழைக்கும் மக்களின் வரலாறு அல்லவா? காலத்தை மீறிய காவியங்கள் எதுவுமில்லை. எல்லா காலங்களுக்கும் பொருந்தும் தர்மம் ஒன்று இல்லை. என்று கூறியவன் பாரதி. அவனே காலத்தின் குரல். திலகரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பாரதி அவருக்கு எழுதினார் ‘ சுதந்திர வேள்விக்காய் விநாயகரைக் கொண்டாடுங்கள்  அதோடு அக்பருக்கும் விழா எடுங்கள் என்றார். ஏனெனில் இந்து முஸ்லீம் ஒற்றுமையிலேயே பாரதம் நிமிர்ந்து நிற்கும் என்ற காந்திய சிந்தனை. அது உண்மையில் நமது மரபான மகாபாரதத்தில் கூறப்பட்ட சகிப்புத்தன்மை தான், நமது வெற்றியின் ஆதாரம் இன்று தன்னை முன்னிறுத்தாது தனது அமைப்பை முன்னிறுத்தும் தலைவர்கள் யாருமில்லை.
       
        உணவின்றி வறுமையால் சாவை வரமாய் கேட்ட குடும்பம் கண்டு பரிதவித்த பாரதி, தமிழகத்தில் இல்லை, பூமிபந்தின் எந்த மூலையிலும் இது நடவாதிருக்க , உலகமே சிந்திப்போம் என்ற சுதேசிமித்திரனில் எழுதியவர் பாரதி.

பாரதிதாசனின் கவிதைத் திறமையைக் கண்டுணர்ந்து உரைத்த பாரதியே நமது ஞான குரு. அவனே காலத்தின் குரல் என்று கூறி முடித்தார். அதனைப் பாராட்டுவதை போல மழையும் துவங்கியது.
        தோழர் பா. அழகிரி மாவட்டத் துணைத் தலைவர்  நன்றி கூற செவிக்கு உணவு தந்த அமைப்பாளர்கள் வந்திருந்தோர் வயிற்றுக்கும் சுவையான உணவு படைத்தனர். இரண்டுமே நீண்ட காலம் மணம் வீசும் என்பது திண்ணம்.
        பின் சேர்க்கை
        விழாவில் பங்கேற்றோர் தனித்த சிறப்பு மிக்கவர்கள். தமிழ் ஆர்வலர்கள். செயற்பாடு மிக்க தமிழ் இயக்க வீரர்கள். மேடைக்கு முன்னே தோழர் . கு.பாலசுப்ரமனியன், AITUC  செயலர் தோழர் M.சேகர், சம்மேளனச் செயலர் கோவி. ஜெயராமன். ஓய்வுபெற்ற AGM திரு க.இளங்கோவன், மற்றும் ஒய்வு பெற்ற பல தோழர்கள், கவிஞர் பால்கி. ஏனைய அதிகாரிகள். இவர்கள் மட்டுமா?
        போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய  தமிழ்ச் சான்றோர்கள் பெரியவர் புலவர் அரங்கநாதன், முதல் விழாவில் சிறப்பு சொற்பொழிவாற்றிய பேராசிரியர் B.பாசுகரன், பேராசிரியர் அர்த்தனாரி ஐயா, சிறந்த நூலகர் விருது பெற்ற பச்சையப்பன், பெரியார் பெருந்தொண்டர் தோழர் அழகரசன், வழக்கறிஞர் கோ. மன்றவாணன், கடல் நாகராசன், புலவர் கதிர் முத்தையன், புலவர் சிவக்கொழுந்து, ஆசிரியர் பாலு, திருப்பாபுலியூர் சைவநெறி மன்ற செயலர் அரசு.பா. சந்திரசேகர். என பற்பல சான்றோர்கள் நமது அவையை அறிஞர்கள் நிறைந்த அவையாக்கினார்கள். நேரில் அழைப்பிதழ் தர இயலாது தொலைபேசியில் அழைத்த போதும் விழாவைச் சிறப்பித்த வாசக வட்டச் செயலர் தோழர் தங்க சுதர்சனம் போன்ற அத்துணை உணர்வாளர்களுக்கும் நமது நன்றி.
        தோழர் சிரில் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்.
    அவர் எம்மை தொடர்ந்து வழி நடத்துவார்....
மாதம் ஒன்றாய் நமது இனையதளத்தில் அவரது கதைகள் உலகைச் சென்று தழுவும்..
நன்றி.



































No comments:

Post a Comment